கோலாலம்பூர், பிப் 21- ‘ஜானா விபாவா‘ திட்டம் தொடர்பில் 69 லட்சம் வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாகப் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 48 வயதான வான் சைபுல் தனக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
மொத்தம் 23 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான செர்த்திக் முதல் கிழக்கு கரை நெடுஞ்சாலை சந்திப்பு வரையிலான “சென்ட்ரல் ஸ்பைன் ரோட்“ சாலைத் திட்டத்தை நெப்டுரிஸ் பென்.பெர்ஹாட் நிறுவனம் மலேசிய அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கு உதவும் நோக்கில் லியான் டான் சுவான் என்பவரிடமிருந்து கையூட்டு பெற்றதாகத் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான சைபுல் முதலாவது குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான ஒப்புதல் கடிதத்தை நெப்டுரிஸ் நிறுவனம் பெறுவதற்கு உதவியதற்கான ஊதியமாக அந்நிறுவனத்திடமிருந்து 69 லட்சத்து 62 ஆயிரத்து 694.50 வெள்ளியைப் பெற்றதாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் டத்தோ வான் ஷாஹாருடின் வான் லாடின் வழக்கை நடத்தும் வேளையில் வான் சைபுல் சார்பில் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தோ போக் தெக் ஆஜராகிறார்.








