கோலாலம்பூர், பிப் 19: நாடு முழுவதும் 3,355 தேர்வு மையங்களில் எஸ்.பி.எம் (SPM) 2022 தேர்வை மொத்தம் 403,637 மாணவர்கள் நாளை எழுதவுள்ளனர். இத்தேர்வு மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெறும்.
தேர்வின் சுமூகமான முகாமைத்துவத்தையும் செயல்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்காக மொத்தம் 131,318 தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (கேபிஎம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"தேதி, நேரம், தேர்வுத் தாள் மற்றும் தேர்வு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்குத் தேர்வு அட்டவணையை எப்போதும் சரிபார்க்குமாறு அனைத்து மாணவர்களும் நினைவு படுத்தப்படுகிறார்கள்.
"மேலும், தேர்வு மையத்திற்கு அடையாள ஆவணங்கள் மற்றும் தேர்வு பதிவு அறிக்கையைக் கொண்டு வருமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.எம் 2022 தேர்வின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குமாறு மாணவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
– பெர்னாமா








