சிரம்பான், பிப் 16- நீலாய் மற்றும் காஜாங் வட்டாரத்தில் கொள்ளையிடுவது மற்றும் கடைகளில் புகுந்து திருடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அந்த பதினைந்து பேரும் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அகமது ட்ஸாஃபீர் முகமது யூசுப் கூறினார்.
காவல் துறையின் “ஓப் தாஜாம் மந்தின்“ நடவடிக்கையில் 25 முதல் 41 வயது வரையிலான அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், கடந்தாண்டு மத்தியிலிருந்து மந்தின் வட்டாரத்தில் இக்கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
கொள்ளைகளை நிகழ்த்தும் போது இக்கும்பல் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும். இக்கும்பல் உறுப்பினர்கள் அனைவரும் பாராங் கத்தியைப் பயன்படுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களைக் கயிற்றால் கட்டுவது வழக்கம் என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கொள்ளை, வீடு புகுந்து திருடுவது, வாகனத் திருட்டு, போதைப் பொருள் விநியோகம் மற்றும் போதைப் பொருளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்டிருப்பது தொடக்ககட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானில் 13 கொள்ளைச் சம்பவங்களுக்கும் சிலாங்கூரில் 5 சம்பவங்ளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்த 18 கொள்ளைச் சம்பவங்களில் ஏற்பட்ட இழப்பு 231,631.50 வெள்ளியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.








