கோலாலம்பூர், பிப் 15- செலாயாங் மருத்துவமனையில் மனநோயாளி ஒருவர் நோயாளி ஒருவரைக் கத்தியால் குத்தியச் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் மஞ்சள் பிரிவில் நேற்று மாலை 3.45 மணியளவில் நிகழ்ந்ததாகச் சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.
மனநோயாளி என நம்பப்படும் 22 வயது ஆடவனால் இடுப்பின் வலது புறத்தில் கத்தியால் குத்தப்பட்ட ஆண் நோயாளி ஒருவர் தரையில் அமர்ந்த நிலையில் இருப்பதை சாட்சி ஒருவர் கண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாகக் கூறிய சசிகலா தேவி, அவரின் வலது, இடது மற்றும் முதுகுப் புறங்களில் கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன என்றார்.
ஆயுதத்தைக் கொண்டு காயம் விளைவித்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 326வது பிரிவின் கீழ் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள்ப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆடவர் சிகிச்சையளிக்கப்பட்டு செலாயாங் மருத்துவமனையின் மனநலச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.








