சிப்பாங், பிப் 15- கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோரைப் பலி வாங்கிய துருக்கிக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு பயணமானார்.
துருக்கிய அதிபர் தாயிப் எர்டோகன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவை வழங்கும் நோக்கில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் பயணம் செய்த விமானம் நேற்றிரவு 11.15 மணியளவில் இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா முனையத்திலிருந்து புறப்பட்டது.
பிரதமர் அன்வார் மற்றும் அவரது பேராளர் குழுவின் பயணம் பாதுகாப்பானதாக அமைய பிரதமரின் சமய ஆலோசகர் ஜம்ரி ஜைனால் அபிடின் துஹா ஓதினார். பிரதமரின் இந்த பயணக் குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடீர், சபா மற்றும் சரவா விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அம்ரிஷான் முகமது அலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அதிபர் எர்டோகன் இரு முறை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததன் பேரிலும் நட்புறவின் அடிப்படையிலும் அன்வார் துருக்கிக்கு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் துருக்கியிலுள்ள மலேசியாவின் தேடுதல் மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) உறுப்பினர்களைச் சந்திப்பார். பின்னர் நாடு திரும்புவதற்கு முன்னர் தலைநகர் அங்காராவில் அதிபர் எர்டோகனுடன் சந்திப்பு நடத்துவார்.








