கோலாலம்பூர், பிப் 15- அந்நிய நாட்டு மீனவர்களின் அத்துமீறல் மற்றும் நாட்டில் ஆள்பலப் பிரச்சனையைக் களைவதற்கு வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இன்று நடைபெறும் கேள்வி பதில் நேரத்தின் போது தென்சீனக் கடல் பகுதியில் அந்நிய நாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைவது தொடர்பில் பெங்கலான் செப்பா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அகமது மர்ஸூக்கி கேள்வியெழுப்புவார்.
நமது நாட்டு மீனவர்களின் வருமானத்திற்குப் பாதிப்பையும் நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகத்தையும் விளைவிக்கும் இப்பிரச்சனைக்குத் தீர்வு
காண உள்துறை அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்
விளக்கத்தை கோருவார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் அரசாங்கத்தின் முயற்சி, அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கான கால அவகாசம் மற்றும் இவ்விவகாரத்தில் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்து பாகான் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் லிம் குவான் எங் மனித வள அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
ஏறக்குறைய ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை மற்றும் ரப்பர் விலைக் குறைவு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்ட ரப்பர் தோட்டக்காரர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கக்கூடிய ரொக்க உதவித் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சரிடம் பெசுட் தொகுதி பெரிக்கத்தான்
உறுப்பினர் சே முகமது ஜூல்கிப்ளி ஜூசோ கேள்வியெழுப்புவார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் காணப்படும் நெரிசலுக்குத் தீர்வு காண்பதற்கான வழி வகைகள் குறித்து சுகாதார அமைச்சரிடம் பண்டார் கூச்சிங் ஹராப்பான் உறுப்பினர் யீ லீ உவேன் விளக்கம் கோருவார்.








