ஷா ஆலம், பிப் 15- பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மறுசீரமைப்பு செய்வதற்குப் பள்ளி நிர்வாகங்கள் மாநில அரசிடமிருந்து நிதி கோரி விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்ப்பள்ளிகள் உள்பட அனைத்து மொழிப் பள்ளிகளும் சமயப் பள்ளிகளும் நேற்று தொடங்கி வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம்.
சிலாங்கூர் மாநிலச் சமய இலாகாவின் கீழ் பதிவு பெற்றுள்ளன ஆரம்ப சமயப் பள்ளிகள் தாபிஷ் அறிவியல் ஒருங்கிணைந்த மஹாட் பள்ளிகளும் இந்த நிதியுதவித் திட்டத்தில் பங்கேற்க முடியும்.
இது தவிர, தேசிய மாதிரி ஆரம்ப தமிழ்ப்பள்ளிகள், தேசிய மாதிரி ஆரம்ப சீனப் பள்ளிகள், தேசிய மாதிரி இடைநிலைச் சீனப்பள்ளிகள் மற்றும் தனியார் சீன இடைநிலைப்பள்ளிகளிடமிருந்தும் மானியத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பள்ளிச் சீரமைப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது பள்ளி மேலாளர் வாரியம் (எல்.பி.எஸ்.) மூலம் www.ssipr.selangor.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகளுக்கான உதவித் திட்டம் 2 கோடியே 65 லட்சம் வெள்ளி கூடுதல் ஒதுக்கீட்டுடன் தொடரப்படும் என்று கடந்தாண்டு இறுதியில் மாநிலச் சட்டமன்றத்தில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.
பள்ளிகளைச் சீரமைப்பதற்கான தேவை மற்றும் அதற்கான விண்ணப்பங்களின் அதிகரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.








