ஷா ஆலம், பிப் 14 - தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் பணிக்காக இரு ஸ்மார்ட் மீட்புக் குழுக்களை அந்நாட்டிற்கு அனுப்பியதற்கு உண்டானச் செலவு 40 லட்சம் வெள்ளியாகும் என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு குழுவையும் அனுப்புவதற்கும் தலா 20 லட்சம் வெள்ளி செலவான வேளையில் அத்தொகை தேசியப் பேரிடர் மேலாண்மை அறங்காப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முதலாவது குழுவில் ஸ்மார்ட் எனப்படும் மலேசியத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 70 பேர் இடம் பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவில் இரசாயனப் பொருள்களை கையாளும் ஹெஸ்மாட் உறுப்பினர்கள், தீயணைப்புத் துறையினர், மருத்துவர்கள் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த பிப்வரி 6ஆம் தேதி
துருக்கிக்குப் பயணமாகினர் என்றார் அவர்.
ஸ்மார்ட் உறுப்பினர்கள், மலேசியப் பொது தற்காப்பு பிரிவினர், தீயணைப்பு வீரர்களை உள்ளடக்கிய 70 பேர் கொண்ட இரண்டாவது குழு இரு தினங்களுக்குப் பின்னர் புறப்பட்டது என்று அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று கோல கங்சார் உறுப்பினர் டத்தோ இஸ்கந்தார் ஜூல்கார்னாய்ன் அப்துல் காலிட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
சிரியாவுக்கான உதவி குறித்து விவரித்த பிரதமர், அந்நாட்டின் நடப்பு நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகக் கோலாலம்பூரில் உள்ள சிரியா அரச தந்திர அலுவலகத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என அவர் சொன்னார்.








