கோலாலம்பூர், பிப் 14- தம்மிடம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும நடைபெறும் அமைச்சரின் கேள்வி நேரம் (எம்.கியூ.டி.) அங்கத்தின் போது பதிலளிப்பார்.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று இந்த எம்.கியூ,டி அங்கத்தைத் தொடக்கி வைப்பதற்கு முன்னர் மக்களவை சபாநாயகர் டத்தோ ஜொஹாரி அப்துல் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் பிரதமர் இந்த எம்.கியூ.டி. அங்கத்தின் முதல் நாளான இன்று மூன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என அவர் சொன்னார்.
இதனிடையே, வரும் வியாழக்கிழமை நடைபெறும் இந்த எம்.கியூ.டி. அங்கத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். இந்த நடைமுறையில் மாற்றம் இருக்கும்பட்சத்தில் அது குறித்து நான் தெரிவிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று தாம் முதன் முறையாக எம்.கியூ.டி அங்கத்தின் கீழ் அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.
இந்த கேள்வி-பதில் நிகழ்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இதன் தொடர்பில் நிரந்தர விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அது வழக்கமான நடைமுறையாக ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும் என்று சபநாயகர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக அனைத்து அவை உறுப்பினர்களும் முகக் கவரி அணிவது ஊக்குவிக்கப்படுவதாகக் கூறிய அவர், மக்களவையில் தொடர்ச்சியாகக் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும் சொன்னார்.








