ECONOMY

மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு மக்கள் சேவையை வலுப்படுத்துவீர்- ரபிஸி வலியுறுத்து

15 ஜனவரி 2023, 10:24 AM
மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு மக்கள் சேவையை வலுப்படுத்துவீர்- ரபிஸி வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 15- சிலாங்கூர் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் எஞ்சி இருக்கும் சில மாதங்களை முறையாகப் பயன்படுத்தி  மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை கெ அடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மாற்றங்கள் தொடர்பில் தங்கள் தொகுதி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஒய்.பி. (மாண்புமிகு) என்ற வார்த்தை மிகவும் மகத்தானது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக மக்களையும் தேர்தல் இயந்திரத்தையும் சந்திக்காதவர்கள் சீக்கிரம் அவர்களைச் சென்று காணுங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மக்களின் கண்களில் அடிக்கடி தென்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் பொறுப்பு மத்தியில் அமைச்சராக இருப்பவரின் பொறுப்புக்கு இணையான சுமையைக் கொண்டது. காரணம், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தேர்தல் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் சிலாங்கூர மாநில கெஅடிலான் தலைவரும் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

சீனப் புத்தாண்டிற்குப் பின்னர் மாநிலத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று மத்திய தேர்தல் நடவடிக்கை இயக்குநருமான ரபிஸி கூறினார்.

அடுத்து வரும் நான்கு அல்லது ஐந்த மாத காலத்தில் நாம் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கெஅடிலானும் ஹராப்பானும் மத்திய அரசின் ஒரு பகுதி என்பதை மக்கள் உணர்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த இயலும் என அவர் மேலும் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.