கோலாலம்பூர், ஜன 10: ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பல்வேறு நகைகளை வாங்குவதற்கு ஓய்வூதியர் வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஏமாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரைக் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் கூறுகையில், 37 வயதான அந்த சந்தேக நபர், உடல்நலக்குறைவு உள்ள ஒரு ஓய்வூதியதாரரின் பராமரிப்பாளராகவும் உள்ளார். தங்க வளையல்கள், 'தங்கக் கட்டிகள்', மற்றும் தங்கச் சங்கிலிகள் வாங்குவதற்காக 19 பரிவர்த்தனைகளை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
85 வயதான அம்முதியவர், டிசம்பர் 20 அன்று தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள உள்ளூர் வங்கிக் கிளையில் தனது வங்கிக் கணக்கின் அறிக்கையை விரிவாகச் சரிபார்த்த பிறகு, சந்தேக நபரால் தான் RM47,940.61 ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
சந்தேக நபர் இப்பொருள்கள் அனைத்தும் தனது சொந்த ஊரில் விற்பனை செய்ததாகவும், விற்பனை செய்த பணத்தை அவரது தனிப்பட்ட தேவைக்காக செலவிட்டதாகவும் அமிஹிசாம் தெரிவித்தார்.
மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 யின் கீழ் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா








