குவாந்தான், ஜன 8: இங்குள்ள செராதிங் கடற்கரையில் நேற்று குளித்து கொண்டிருக்கும் போது காணாமல் போனதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
அடாம் ரிஸ்வான் அப்துல் ரெஜாப் (18) என்ற அந்த மாணவனின் சடலம், புகாரளிக்கப்பட்ட இடத்திலிருந்து 8.6 கிலோமீட்டர் தொலைவில், கடற்கரையில் காலை 7 மணியளவில் ஒரு தம்பதியினரால் கண்டுபிடிக்கப்பட்டது என குவாந்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் முகமட் சஹாரி புசு தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக உடல் அருகில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு (HTAA) கொண்டு செல்லப்பட்டதாகவும் மேலும் மருத்துவமனைக்கு வந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் உடல் அடையாளத்தை உறுதி படுத்தியதாகவும் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாங்கான் சேர்ந்த அம்மாணவர் நேற்று மதியம் 1.45 மணி அளவில் கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தண்ணீரில் வட்டமிடும் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, நீரோட்டத்தால் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த மாணவன் தனது மற்ற 19 நண்பர்களுடன் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.
- பெர்னாமா








