புத்ராஜெயா, ஜன 6- சுகாதார அமைச்சு இவ்வாண்டில் 4,914 நிரந்தரப் பணி
நியமனங்களை வழங்குகிறது. பணி நியமனம் பெறுவோரில் 4,263
மருத்துவ அதிகாரிகள், 335 பல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் 316
மருந்தக அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த பணிகளுக்கான விண்ணப்ப பாரங்களை இன்று தொடங்கி இம்மாதம்
21ஆம் தேதி வரை https://spa9.spa.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாகப்
பெறலாம் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா
கூறினார்.
மருத்துவ அதிகாரிகள் களைப்பு மற்றம் அயர்ச்சிக்கு உள்ளாவதைத் தவிர்க்க
மருத்துவமனைகளில் பணிபுரிவோரைச் சுகாதாரக் கிளிக்குகளுக்கு இடம்
மாற்றுவதைப் போன்ற பணி சுழற்சி முறையை அமல்படுத்தும்படி மாநிலச்
சுகாதார இயக்குநர்களைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
இன்று இங்கு நடைபெற்ற சுகாதார அமைச்சு நிலையிலான 2023
புத்தாண்டு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றியப் போது அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க
சுகாதார கிளிளிக்குகளில் சேவை நேரத்தை அதிகரிப்பது குறித்து மாநில
சுகாதார இயக்குநர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்
கொண்டார்.
கடுமையான பாதிப்பு இல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்ட
நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவில் அல்லாமல் கிளினிக்குகளில்
சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என
அவர் சொன்னார்.








