கோல திரங்கானு, டிச 30- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திரங்கானு மக்களுக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் 500,000 வெள்ளி உதவி நிதியை மந்திரி புசார் இன்று ஒப்படைத்தார்.
மரியாதை நிமித்தப் பயணம் மேற்கொண்டு திரங்கானு மாநிலத்திற்கு சென்றிருக்கும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அம்மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சுரி மொக்தாரை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை சந்தித்தார்.
அச்சந்திப்பின் போது மாநில அரசின் இந்த உதவி நிதியை அவர் அகமது சும்சுரியிடம் ஒப்படைத்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரங்கானு மக்களின் சுமையைக் குறைப்பதில் இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
இரு மாநிலங்களுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு இது காட்டுகிறது. கடந்தாண்டு சிலாங்கூரில் வெள்ளம் ஏற்பட்ட போது மற்ற மாநிலங்கள் நமக்கு உதவின என்றார் அவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கிளந்தான் மாநிலத்திற்கு வருகை மேற்கொண்ட அமிருடின், அம்மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அகமது யாக்கோப்பைச் சந்தித்து 500,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதியை வழங்கினார்.
அண்மையில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களுக்கு பத்து லட்சம் வெள்ளி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என மந்திரி புசார் இம்மாதம் 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.






