ஷா ஆலம், டிச 29- சீனாவில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மலேசியர்களை சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் நோய் பாதிப்புக்கான சாத்தியம் அதிகம் உள்ள தரப்பினரின் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள ஆகக்கடைசி நிலவரங்களை கருத்தில் கொண்டுள்ளோம். ஆகவே, முன்களப் பணியாளர்களும் நோய்த் தாக்கம் அபாயம் அதிகம் உள்ளவர்களும் ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் சீனாவில் நோய் அதிகரிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுப்பது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.
சீனாவின் ஸெங்ஜியாங் மாநிலத்தில் தினசரி கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 10 லட்சம் வரை பதிவாகியுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு சாத்தியம் உள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.








