ஜோகூர் பாரு, டிச 18- நாடு முழுவதும் உள்ள கைவிடப்பட்ட மற்றும் பிரச்சனைக்குரிய வீடமைப்புத் திட்டங்களுக்கு தீர்வு காண்பதே ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் தலையாயப் பணியாக உள்ளது.
தாம் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இப்பிரச்சனை மீது தீவிர கவனம் செலுத்தி வந்ததாக அதன் துணையமைச்சர் அக்மால் நசாருல்லா முகமது நாசீர் கூறினார்.
கைவிடப்பட்ட மற்றும் பிரச்சனைக்குரிய வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான விவகாரத்திற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஊராட்சி மன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙா கோர் மிங், தேசிய வீடமைப்பு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்புக் கொள்கை மிகவும் முன்னோக்கி உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் பல வீடமைப்புத் திட்டங்கள் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளன என்று கிம் தெங் பார்க் மக்களுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் குறித்து வினவப்பட்ட போது நசாருல்லா இவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை நடைபெற்றதும் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க தேசிய வீடமைப்பு மன்றத்துடன் தமது தரப்பு சந்திப்பு நடத்தும் என்று ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.







