ஷா ஆலம், டிச 18- சாலையில் சகதி வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2இல் (எல்.டி.பி.2) பயணிப்போர் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 393வது கிலோ மீட்டரில் அஜில் மற்றும் புக்கிட் பீசிக்கு இடையிலான பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சகதி வெள்ளத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியின் எதிர்தடம் இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் அமலாக்கத் தரப்பினரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்கும்படி நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இன்று காலை 11.00 மணியளவில் அருகிலுள்ள மலைப்பகுதியிலிருந்து நீர் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட சகதி வெள்ளம் அந்த நெடுஞ்சாலையை சூழ்ந்ததாக திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. ஹஸ்மீரா ஹசான் கூறினார்.
இந்த சகதி வெள்ளம் காரணமாக அப்பகுதியில் விபத்து எதுவும் நிகழவில்லை எனக் கூறிய அவர், நெடுஞ்சாலையின் இரு தடங்களிலும் போக்குவரத்து சீராக உள்ளது என்றார்.
அந்த நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை சித்தரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்கள் பரவலாக பகிரப்பட்டன.







