பத்தாங் காலி, டிச 18- இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மண்வாரி இயந்திரத்தில் படாமலிருப்பதை உறுதி செய்ய அப்பகுதியில் மண்ணைத் தோண்டும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும்.
இறந்தவர்களின் உடல்களை கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக நிலச்சரிவினால் குவிந்துள்ள மூன்று அல்லது நான்கு அடி உயர மண்ணை அகற்றும் பணி தொடக்கக் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராசாம் காமிஸ் கூறினார்.
பூமியின் நிலப்பரப்பு க்கும் நிலச்சரிவில் உண்டான மண் குவியலுக்கும் இடையே இறந்தவர்கள் உடல்கள் சிக்கி இருக்கலாம் என என சந்தேகிக்கிறோம். ஆகவே, தொடக்கக் கட்டமாக பூமிக்கு மேல் மட்டத்தில் குவிந்துள்ள மூன்று அல்லது நான்கு அடி மண்ணை அகற்ற உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் மண்ணைத் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும். உடல்கள் கிடைக்காத பட்சத்தில் மண்ணைத் தோண்டும் பணி தொடரப்படும்.
எனினும், மண்வாரி இயந்திரத்தில் புதையுண்டவர்களின் உடல்கள் சிக்காமல் இருப்பது உறுதி செய்ய மண்ணைத் தோண்டும் பணி கவனமாகவும் பொறுமையாகவும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மண்ணைத் தோண்டும் பணியை மீட்பு பணி உறுப்பினர் கண்காணிக்கும் வேளையில் எவ்வாறு மண்ணைத் தோண்டுவது என்று வழிகாட்டுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று காலை வரை எட்டு மண்வாரி இயந்திரங்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்







