கோலாலம்பூர், டிச 18- இன்று காலை நிலவரப்படி நான்கு மாநிலங்களில் உள்ள வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 1,750 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கிளந்தானில் மிக அதிகமாக அதாவது 490 குடும்பங்களைச் சேர்ந்த 1,584 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.
அவர்கள் அனைவரும் பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் அகப்பக்கம் தெரிவித்தது.
சுங்கை கோலோக்கின் கம்போங் ஜெனாப் பகுதியில் நீர் மட்டம் 24.6 மீட்டரை எட்டி அபாயக் கட்டத்தில் உள்ளது. சுங்கை கோலோக்கின் ரந்தாவ் பாஞ்சாங் பகுதி, சுங்கை பெர்காவ், சுங்கை லானாஸ் ஆகியவை எச்சரிக்கை கட்டத்தில் உள்ளன.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 21 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் நிவாரண மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தை பொறுத்தவரை உலு திராங்கானு மற்றும் டுங்குன் மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ள மூன்று நிவாரண மையங்களில் 47 பேர் தங்கியுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் தங்கியுள்ளனர்.







