ஷா ஆலம், டிச 18- ஆக்ககரமான மற்றும் சுறுசுறுப்பான சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்காக இரு உயரிய விருதுகளை சிலாங்கூர் மாநில சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பான டூரிசம் சிலாங்கூர் தட்டிச் சென்றுள்ளது.
சுற்றுலாத் துறையில் சிறந்த அரசு சேவைக்கான அடைவுநிலை விருதையும் உள்நாட்டு சிறந்த சுற்றுலா சேவைக்கான பொதுச் சேவை விருதையும் மலேசிய பொது உறவு மற்றும் தொடர்புச் சங்கத்திடமிருந்து டூரிசம் சிலாங்கூர் பெற்றது.
டூரிசம் சிலாங்கூர் மேற்கொண்டு வரும் பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்களை மேலும் ஆக்ககரமான முறையில் மேல் கொள்வதற்குரிய உத்வேகத்தை இந்த விருதுகள் தங்களுக்கு வழங்கியுள்ளதாக அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி கூறினார்.
ஆக்ககரமான மற்றும் சுறுசுறுப்பான சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்கள் மூலம் 2021ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கான பிரிவில் 1 கோடியே 2 லட்சம் வருகையாளர்களுடன் சிலாங்கூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த விருதுக்கு டூரிசம் சிலாங்கூர் பரிசீலிக்க படுவதற்கு இந்த 1 கோயே 2 லட்சம் சுற்றுப்பயணிகளின் வருகை ஒரு அளவு கோளாக இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல எனக்கூறிய அவர், எனினும் ,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் இத்தொழில் துறை பங்கேற்பாளர்கள் தங்களின் ஆற்றலைப் புலப்படுத்தியுள்ளனர் என்றார்.
கித்தா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கிய பல்வேறு ஊக்குவிப்புச் சலுகைகளும் தங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.








