பாங்கி, நவ 28- பிரதமரின் ஆதரவை உறுதி செய்வதில் தீர்க்கமான முடிவை எட்டுவதற்கு ஏதுவாக வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 15வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கத்தில் ஏற்பட்டதைப் போல் பிரதமரின் நம்பகத் தன்மை மீது சில தரப்பினர் தொடர்ந்து கேள்வியெழுப்புவதை தவிர்ப்பதற்கு இந்த தீர்மானம் அவசியம் என்று பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த படாவிட்டாலும் கூட வரவு செலவுத் திட்டத்தை நாம் தாக்கல் செய்தாக வேண்டும். அந்த வரவு செலவுத் திட்ட தாக்கல் கூட ஒரு வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பாக அமையும் என்று சிலாங்கூர் மந்திரி பெசாருமான அவர் சொன்னார்.
இங்குள்ள யுனிடென் பல்கலைக்கழகத்தில் 2022ஆம் ஆண்டிற்கான மாசிஸ்வா நெட்வேர்க்கிங் கேம்ஸ் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் என்ற முறையில் தமக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பை தாக்கல் செய்யவுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராக பதவியேற்றப் பின்னர் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.







