பெட்டாலிங் ஜெயா, நவ 23 - வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2023ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் வரவிருக்கும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் வியூகங்களில் கவனம் செலுத்தும்.
உணவு விநியோக நெருக்கடி, நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டு பொருளாதார நிலைமை சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பல அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு நாங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும் பதத்தை அறிமுகப் படுத்தினோம். இருந்த போதிலும் இந்த பட்ஜெட்டில் சிலாங்கூர் சோதனையை கடப்பது மட்டும் இல்லாமல் பொருளாதார அலையை தாண்டிச் செல்வதையும் உறுதி செய்வோம் என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் சிலாங்கூரை வலுப்படுத்த விரும்புகிறோம், அதே நேரத்தில் மாநிலத்தின் பரிவு குணத்தையும் பேணிகாக்க விரும்புகிறோம் என்று நேற்று ஸ்ரீ சிலாங்கூர் கோல்ப் கிளப்பில் நடைபெற்ற சிலாங்கூர் மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டியின் போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்
ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிற்பகல் 3.00 மணிக்கு மந்திரி புசாரால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சிலாங்கூர் டிவி மற்றும் மீடியா சிலாங்கூர் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் .
சிலாங்கூர் கினி, சிலாங்கூர் ஜெர்னல், சிலாங்கூர் இன்று தமிழ்ப்பதிப்பு மற்றும் மாண்டரின் இணைய பதிப்புகள் வாயிலாகவும் பட்ஜெட் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.







