கோலாலம்பூர், நவ 15- இன்று காலை வரை ஆறு மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 28 தற்காலிக வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 2,984 பேர் தங்கியுள்ளனர்.
சிலாங்கூரில் உள்ள துயர் துடைப்பு மையங்களில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்கியுள்ளதாக சமூக நலத் துறையின் இன்போ பெஞ்சானா அகப்பக்கம் கூறியது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 36 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேராக இருந்தது.
இம்மாநிலத்தில் சுங்கை சீரே ஆரம்பப்பள்ளி, ஜெராம் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் பத்தாங் பெர்ஜூந்தை யூக் சீ தேசிய மாதிரி சீனப்பள்ளியில் மூன்று துயர் துடைப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மலாக்காவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் மூன்று துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு 8.00 மணியளவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் அங்கு தங்கியிருந்தனர்.
கிளந்தான் மாநிலத்தில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 713 குடும்பங்களைச் சேர்ந்த 2,124 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த அடை மழை காரணமாக கெடா மாநிலத்தின் கூலிம் மற்றும் பாலிங் மாவட்டங்களைச் சேர்ந்த 61 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


