ஷா ஆலம், நவ 5- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் நாட்டின் தென் மாநிலங்களில் முக்கியத் தலைவர்கள் பலர் சக அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான போட்டியை எதிர் நோக்குகின்றனர்.
பல முனைப் போட்டியை எதிர்நோக்கும் தலைவர்களில் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண், மூடா கட்சியின் தலைவர் சைட் சடிக் சைட் ரஹ்மான் முன்னாள் கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் ஆகியோரும் அடங்குவர்.
இத்தேர்தலில் தங்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு இத்தலைவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூரில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு-
சிரம்பான்- தொகுதியை தக்கவைத்துக் கொள்வதற்கு போட்டியிடும் ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்கை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் ஃபெலிசியா வோங் போட்டியிடுகிறார்.
ரெம்பாவ்- அம்னோ துணைத் தலைவரான முகமது ஹசானை எதிர்த்து ஹராப்பான் சார்பில் ஜூப்ரி ஜொஹா களம் காண்கிறார்.
போர்ட்டிக்சன்- இத்தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருணும் தேசிய முன்னணி சார்பில் முன்னாள் துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதனும் சுயேச்சையாக ரானி குலுப்பும் போட்டியிடுகின்றனர்.
பாகோ- பெரிக்கத்தான் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிடின் யாசினை எதிர்த்து ஹராப்பான் கூட்டணி சார்பில் இஸ்கந்தார் ஷாவும் தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ ரசாலி இப்ராஹிமும் போட்டியிடுகின்றனர்.
மூவார்- மூடா கட்சித் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஹராப்பான் கூட்டணி சார்பில் இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடும் வேளையில் அவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் முகமது ஹெல்மி அப்துல் லத்திப் போட்டியிடுகிறார்.
ஆயர் ஹீத்தாம்- தேசிய முன்னணி வேட்பாளரான மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங்கிற்கும் ஹராப்பான் வேட்பாளர் ஷேக் ஓமார் பாக்ரிப் அலிக்கும் இடையே இத்தொகுதியில் போட்டி நிலவுகிறது.
சிம்பாங் ரெங்கம்- ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக்கை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமது போட்டியிடுகிறார்.








