ஷா ஆலம், நவ 3- வரும் 15வது பொதுத் தேர்தலில் மலேசிய ஜனநாயக கூட்டணியுடன் (மூடா) கொண்டுள்ள ஒத்துழைப்பு சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான் நிலையை வலுப்படுத்தும் .
மாநிலத்தில் இளம் தலைமுறையினரின் ஆதரவைத் திரட்டுவதில் உதவக்கூடிய அக்கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரில் நம்மை வலுப்படுத்தக் கூடிய மற்றும் மதிப்பைக் கூட்டக் கூடிய ஒரு அங்கமாக மூடா கட்சி விளங்கும். இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இளையோரின் ஆதரவைப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
நமது சாதனைகளும் அடைவு நிலையும் தொகுதிகளில் வெற்றி பெறவும் கடந்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கட்சியிடம் தோற்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் ஹராப்பானுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றிவு இங்குள்ள டேவான் ராஜா மூடா மூசாவில் சிலாங்கூர் ஹராப்பான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 22 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அவர் இவ்வாறு சொன்னார்.
இத்தேர்தலில் மூடா கட்சி சிலாங்கூர், பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது.








