கோலாலம்பூர், அக் 30- இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 20 முதல் 26 வரை அமல்படுத்தப்பட்ட உச்சவரம்பு விலை விதிகளை மீறிய குற்றத்திற்காக 24 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் 111 மொத்த வியாபார மற்றும் 4,228 சில்லறை வியாபார மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருள்ளை நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் அதிக விலையில் விற்றது, விலைப்பட்டியலை வைக்கத் தவறியது, இளஞ்சிவப்பு விலைக் குறியீட்டைப் பயன்படுத்த த் தவறியது ஆகியவை அந்த வணிகர்கள் புரிந்த குற்றங்களில் அடங்கும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு உச்சவரம்பு விலை நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் செம்மறியாட்டு இறைச்சி, தக்காளி, தேங்காய், மிளகாய், சிறிய வெங்காயம் (இந்தியா), பெரிய வெங்காயம், பருப்பு (ஆஸ்திரேலியா) ஆகியவையும் அடங்கும்.
பெருநாள் காலத்தில் குறிப்பாக தீபாவளியின் போது பொதுமக்களுக்கு வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் எடுத்து வரும் ஆக்கப்பூர்மான நடவடிக்கைகளில் இந்த உச்சவரம்பு விலைத் திட்டமும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.








