ஷா ஆலம், செப் 16-மக்கள் இன, மத வேறுபாடின்றி வெளிப்படுத்திய ஒற்றுமை போராட்டங்களில் குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றை எதிர் கொள்வதில் அவர்களின் வலுவை வெளிப்படுத்தியதாக மந்திரி புசார் குறிப்பிட்டார்.இத்தனை ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்த ஓற்றுமை வாழ்க்கையில் இலக்கையும் வளப்பத்தையும் அடைவதற்கு வழிகோலியது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.
வாழ்க்கை வழக்க நிலைக்குத் திரும்பியது குறித்து நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அவர்.இன்று அனுசரிக்கப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு சுதந்திரமடைந்த அறுபது ஆண்டு காலத்தில் நவீன மலேசியாவை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அமிருடின் குறிப்பிட்டார். நடப்பு யுகத்திற்கேற்ப புதிய ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தை உருவாக்குவதற்கு பல தியாகங்களையும் கசப்பான முடிவுகளையும் எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் சொன்னார்.








