புத்ரா ஜெயா, செப் 4- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அந்நியத் தொழிலாளர்களிடமிருந்து 350 கோடி வெள்ளி லெவி தொகையை குடிநுழைவுத் துறை வசூலித்துள்ளது.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 250 கோடி வெள்ளியாக இருந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ட்ஜைமி டாவுட் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உயர்ந்த பட்ச லெவி தொகை வசூலிக்கப்பட்டது என்று இமிகிரேஷன் ரன் 2022 ஓட்டப் பந்தய நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி மூலம் குடிநுழைவுத் துறை அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இதுவரை 13 லட்சத்து 50 அந்நிய நாட்டினர் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதனை அடுத்து அனைத்துலக மலேசிய கடப்பிதழ்களை வெளியிடுவது மற்றும் புதுப்பிப்பதன் வாயிலாகவும் குடிநுழைவுத் துறையின் சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் மூலமாகவும் கணிசமான தொகை வசூல் செய்யப்பட்டது என்றார் அவர்.
நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் இவ்வாண்டு முழுவதும் வசூல் செய்வதற்கு குடிநுழைவுத் துறை நிர்ணயித்துள்ள தொகையைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்வதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஆகஸ்டு மாதத்துடன் அடைந்து விட்ட காரணத்தால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வசூலாகும் தொகை போனசாக கருதப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.








