ஷா ஆலம், ஆக 21- இருபது கனமீட்டர் இலவச நீர் விநியோகச் சலுகையைப் பெறுவதற்கு ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான் எனப்படும் இலவச நீர் விநியோகத் திட்ட விண்ணப்ப நிபந்தனைகளைச் சரிபார்க்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலாங்கூரில் வசிக்கும் மலேசிய பிரஜைகளாகவும் குடும்ப வருமானம் மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று பெருங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் தனி மீட்டரைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அது நினைவுறுத்தியது.
இந்த இலவச நீர் விநியோகத் திட்டத்திற்கு தகுதி பெற ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான் திட்டத்தின் விண்ணப்பங்களை சரிபாருங்கள். இத்திட்டத்தின் வாயிலாக மாதாந்திர செலவினத்தைக் குறையுங்கள் என்று அந்நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் கூறியது.
இந்த இலவச நீர் விநியோகத் திட்டத்திற்கு வரும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
பொதுமக்கள் https://www.airselangor.com/residen.../skim-air-darul-ehsan/ என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பங்களைச் சரிபார்க்கலாம்.








