ஷா ஆலம், ஆக 19- நிதிப் பிரச்னையை எதிர்நோக்கும் ஆலயங்கள் மானியம் பெறுவதற்கு லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து , சீக்கிய மற்றும் தோ சமய செயல்குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மானியம் பெறுவதற்கு இணையம் வழி விண்ணப்பிக்கும் நடைமுறை இவ்வாண்டு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு குறைவான விண்ணப்பங்களே ஆலயங்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாக லீமாஸ் இணைத் தலைவர் வீ.கணபதிராவ் கூறினார்.
தொழில்நுட்பத்தைக் கையாளவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை உள்ளிட்ட சிக்கல்களை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, மானியம் தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அலுவலகத்திற்கு வாருங்கள் என அவர் சொன்னார்.
முழுமையான மற்றும் தகுதி உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்வதில் எங்கள் அலுவலகப் பணியாளர்கள் உதவி புரிவர். எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய விண்ணப்பங்கள் முழுமையாக இருப்பது அவசியம் என்றார் அவர்.
இன்று இங்கு 71 ஆலய பொறுப்பாளர்களிடம் 670,000 வெள்ளி மானியத்தை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி ஆலயங்களுக்கான மானியத்திற்கு limas.selangor.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் கணபதிராவ் கூறினார்.








