ஜோகூர் பாரு, ஜூன் 12- அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியார் மூலம் நடத்தப்படும் 1,028 பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மையங்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹருண் கூறினார்.
பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத பராமரிப்பு மையங்கள் குறித்த தரவுகளைப் பெறுவதற்கு ஏதுவாக அம்மையங்களை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அமைச்சு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்த தாக அவர் சொன்னார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,028 பதிவு பெறாத மையங்களும் 1,910 பதிவு பெற்ற மையங்களும் செயல்படுவது கண்டறியப் பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பதிவு பெறாத 1,028 மையங்களில் 57 நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ள வேளையில் 38 மையங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் எட்டு மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு 35 மையங்களுக்குக குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் காப்பதற்கு ஏதுவாக அமைச்சரவையிடம் செயலறிக்கை சமர்ப்பிக்க தனது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.








