ஷா ஆலம், ஜூன் 9- கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள காரணத்தால் நெகிழிப்பை பயன்பாடு இல்லாத் திட்டத்திற்கு செக்சன் 14 இல் அமைந்துள்ள விஸ்தா ஆலம் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு தேர்வு செய்யப்பட்டது.
நெகிழிப்பை பயன்பாட்டிற்கு எதிரான இந்த திட்டத்தை பிற இடங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்னர் முன்னோடித் திட்டமாக விஸ்தா ஆலமில் இதனை அமல்படுத்தியதற்கு நகரின் மையப்பகுதியில் அந்த குடியிருப்பு அமைந்துள்ளதே காரணம் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
நாங்கள் இலக்காகக் கொண்ட அனைத்து தரப்பினரையும் இந்த குடியிருப்பு பகுதி உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, வீடுகள், அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் வர்த்தக மையங்களோடு மக்கள் ஒன்று கூடும் மையமாகவும் இது விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
இங்குள்ள குடியிருப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் வருகையாளர்கள் நெகிழிப் பை, அதுசார்ந்த உணவு மற்றும் குடிப்பானக் கலங்கள் மற்றும் நெகிழிப்பை சார்ந்த பொருள்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறையைக் கடைபிடிப்பர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நெகிழிப்பைகளுக்கு எதிரான பிரசாரத் திட்டம் வெற்றியடைவதை உறுதி செய்ய அப்பகுதியில் அவ்வப்போது மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது என்றும் அவர் தெரிவித்தார்.


