கோலாலம்பூர், ஜூன் 4- இறக்குமதி செய்யப்படும் உணவும் வெளிநாட்டு உணவு இறக்குமதியும் சமநிலையில் உள்ளதை விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சு தொடர்ந்து உறுதி செய்து வரும்.
நாட்டிலுள்ள மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமான மூலப் பொருள்கள் உள்ளதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் மேம்பாட்டுத் துறைக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ பட்ருள் ஹிஷாம் முகமது கூறினார்.
தமது துறை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பில் உணவு விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வெளிநாட்டு இறக்குமதியை கருத்தில் கொள்ளும் பட்சத்தில் பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் மலேசியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வளங்களைப் பொறுத்த வரை சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களின் தேவைக்கேற்ப உணவு விநியோகத்தை சமன்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
அண்மைய காலமாக உணவு விநியோகம் அல்லது உற்பத்தியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. உதாரணத்திற்கு, இறக்குமதி செய்யப்படும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இதரப் பொருள்களுக்கான விலை உயர்வு கண்டன என்று பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.








