ALAM SEKITAR & CUACA

மத்திய அரசின் வெ.2,500 வெள்ள உதவி நிதி கிடைக்காத விவகாரம்- மாநில அரசு உதவ வாக்குறுதி

13 மே 2022, 1:24 AM
மத்திய அரசின் வெ.2,500 வெள்ள உதவி நிதி கிடைக்காத விவகாரம்- மாநில அரசு உதவ வாக்குறுதி

ஷா ஆலம், மே 13- கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைப் பொருள்கள் வாங்க 2,500 வெள்ளி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத விவகாரத்திற்கு தீர்வு காண மாநில அரசு முன்வந்துள்ளது.

வெள்ளம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆன போதிலும் பிரதமர் துறையின் ஒருங்கிணைப்பு அமலாக்கப் பிரிவினால் கையாளப்படும் இந்த நிதி இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பலர் புகார் தெரிவித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ

அமிருடின் ஷாரி கூறினார்.

மத்திய அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட அந்த நிதி இன்னும் பலருக்கு கிடைக்காதது தொடர்பில் நாங்கள் பல புகார்களைப் பெற்றுள்ளோம்.

அந்த நிதி இன்னும் வழங்கப்படாததற்கு தொடர்பு அல்லது இதரப் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்.  வாக்குறுதியளிக்கப்பட்டபடி அந்நிதி மக்களைச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு மாவட்ட மற்றும் நில அலுவலக நிலையில் நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

இந்த நிதியை விரைந்து பகிர்ந்தளிக்க பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு மாவட்ட மற்றும் நில அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமிருடின் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கும் பணி முற்றுப் பெற்றுவிட்டதாகக் கூறிய அவர், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 122,000 குடும்பங்களுக்கு 12 கோடியே 20 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது என்றார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைப் பொருள்களை வாங்க 2,500 வெள்ளி வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்திருந்தது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.