கோலாலம்பூர், ஏப் 17- இங்குள்ள ஸ்தாபாக், ஜாலான் டானாவ் சவுஜானா 2 இல் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 18 மாடியிலிருந்து விழுந்து 4 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பி.வி. 10 எனும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பி புளோக்கில் நேற்று விடியற்காலை 2.00 மணியளவில் நிகழ்ந்ததாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.
தாயார் வீட்டில் இல்லாத நிலையில் அச்சிறுமி தனியாக அறையில் உறங்கியுள்ளார். வீட்டிலுள்ள மற்றவர்கள் இதர அறைகளில் தங்கியியுள்ளதோடு அச்சிறுமி தனியாக உள்ளதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று அவர் சொன்னார்.
அச்சிறுமியின் சடலம் சோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-92899222 என்ற எண்களில் வங்கா மாஜூ போலீஸ் நிலையத்தை அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
சிறு வயது பிள்ளைகளை தனியாக விட வேண்டாம் என்று பெற்றோர்களை அஸ்ஹாரி கேட்டுக் கொண்டார். இத்தகைய அலட்சியச் செயல் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








