ECONOMY

மகளிர் தினத்தை முன்னிட்டு செந்தோசா தொகுதியில் பெண்கள் கௌரவிப்பு

27 மார்ச் 2022, 6:56 AM
மகளிர் தினத்தை முன்னிட்டு செந்தோசா தொகுதியில் பெண்கள் கௌரவிப்பு

ஷா ஆலம், மார்ச் 27- செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செந்தோசாவின் அற்புத மகளிர் (வாவ்) எனும் நிகழ்வில் 70 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தொகுதி நிலையிலான பல்வேறு திட்டங்களுக்கு உதவிகளை நல்கிய மகளிரை கௌரவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

தொகுதி ஏற்பாட்டில் இதுநாள் வரை நடத்தப்பட்ட நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்கி வரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரிய மற்றும் மருத்துவ நிபுணர் ஆகியோரும் இந்த நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் உதவித் தேவைப்படும் சுமார் 500 பேருக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிவதில் செந்தோசா வாவ் மகளிர் எனக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனர் என்று அவர் சிலாங்கூரிகினியிடம் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பெஸ்ட் ஐசிட்டி ஹோட்டலில் நடைபெற்ற செந்தோசா வாவ் அனைத்துலக மகளிர் தின நிகழ்வுக்குப் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவாய்ரியா ஜுல்கிப்ளியும் கலந்து கொண்டார்.

இதனிடையே, சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் மகளிர் பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை அமல்படுத்தி வரும் செந்தோசா தொகுதி பொறுப்பாளர்களை தாம் பாராட்டுவதாக ஜுவாய்ரியா சொன்னார்.

அரசியல் மற்றும் சமூகவியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும்படி நான் மகளிரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டிற்கான மகளிர் தின கருப்பொருளுக்கேற்ப நம்மால் ஆண்களை வழிநடத்த முடியும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.