ECONOMY

ஒமிக்ரோன் புயலை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்- டாக்டர் நோர் ஹிஷாம்

17 பிப்ரவரி 2022, 3:45 AM
ஒமிக்ரோன் புயலை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்- டாக்டர் நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், பிப் 17- பொது சுகாதார மற்றும் சமூக விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் கோவிட்-19 நோய்த் தொற்று புயலை மலேசியர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

இப்பிராந்தியத்திலுள்ள பல நாடுகளில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை துரிதமாக உயர்வு கண்டு வருகிறது என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறினார்.

உங்களையும் உங்களின் நேசத்திற்குரியவர்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக தயவு செய்து தடுப்பூசியையும் பூஸ்டர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

மலேசியாவில் நேற்று 27,831 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நோய்த் தொற்று பரவியது முதல் நாட்டில் ஒரே நாளில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் போது லேசான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் இரண்டாம் கட்ட பாதிப்பை பலர் எதிர்நோக்குகின்றனர். உதாரணத்திற்கு நேற்று 99.65 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

எனினும், சில தினங்களுக்குப் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனை அல்லது கோவிட்-19 தனிமைப் படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அடுத்தக் கட்டத்திற்கு சென்று விடுகின்றனர் என்றார் அவர்.

நேற்று மாலை 5.00 மணி வரை 1,269 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அவர்களில் 33.7 விழுக்காட்டினர் அல்லது 428 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.