ECONOMY

10,000 யு.பி.எம். மாணவர்கள் மார்ச் 16 இல் பல்கலைக்கழகம் திரும்புவர்

12 பிப்ரவரி 2022, 12:10 PM
10,000 யு.பி.எம். மாணவர்கள் மார்ச் 16 இல் பல்கலைக்கழகம் திரும்புவர்

புத்ரா ஜெயா, பிப் 12- மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் (யு.பி.எம்.) பயிலும் சுமார் 10,000 மாணவர்கள் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி (எஸ்.ஒ.பி.)  பல்கலைக்கழக வளாகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2021/2022 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்கான கல்வியைத் தொடரவுள்ள அவர்கள் தங்கும் விடுதியில் பதிவு செய்வதற்காக வரும் மார்ச் மாதம் 16 முதல் 18 ஆம் தேதி வரை கட்டங் கட்டமாக அந்த உயர்கல்விக் கூடத்திற்கு வருவர்.

இந்த முடிவின் அடிப்படையில் உயர்கல்விக் கூடம் திரும்பும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படு வருவதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகாரங்களுக்கான துணை உதவி வேந்தர் பேராசிரியர் டாக்டர் அரிபின் அப்டு கூறினார்.

யு.பி.எம். வளாகத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாணவர்களின் நுழைவு மற்றும் பதிவு நடவடிக்கைகள் யாவும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதை பல்கலைக்கழக தங்கும் விடுதி நிர்வாகத்தினர் உறுதி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கையின் போது உடல் நிலை தொடர்பான விபரங்களை மாணவர்கள் பாரங்களில் பூர்த்தி செய்வது, முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.