ALAM SEKITAR & CUACA

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர பக்தர்கள் தைப்பூசத்தில் உறுதி

18 ஜனவரி 2022, 12:07 PM
வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர பக்தர்கள் தைப்பூசத்தில் உறுதி

ஷா ஆலம், ஜன 18- வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்குரிய மனவலிமையை பெறுவதற்கு இந்துக்கள் இந்த தைப்பூச விழாவில் உறுதி பூண்டுள்ளனர்.

கடந்த மாத மத்தியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் உண்டான இழப்பு தமக்கு பெரும் சவாலாக உள்ளதாக தாமான்  ஸ்ரீமூடாவைச் சேர்ந்த தனித்து வாழும் தாயான கே. முருகேஸ்வரி (வயது 58) கூறினார்.

அந்த வெள்ளப் பேரிடரில் வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்த அனைத்து பொருள்களும் சேதமடைந்து விட்டதாக அவர் சொன்னார்.

சவால்கள் வரும் போது அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அதிலிருந்து மீள்வதற்குரிய மனவுறுதியையும் இந்த தைப்பூச விழா எங்களுக்கு வழங்கியுள்ளது அவர் குறிப்பிட்டார்.

இந்த மனவுறுதியே இழப்பிலிருந்து வாழ்க்கையை மீட்டெடுப்பதற்குரிய பக்குவத்தை எங்களுக்கு வழங்குகிறது என்று இங்குள்ள செக்சன் 23, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சந்தித்த போது திருமதி முருகேஸ்வரி கூறினார்.

இந்த வெள்ளப் பேரிடர் சம்பவத்தை சமயத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள தாங்கள் தயாராகி விட்டதாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான ஏ.குமரன் (வயது 37) தெரிவித்தார்.

வெள்ளத்தில் அனைத்து பொருள்களையும் இழந்தாலும் அதனை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது என்று புக்கிட் கெமுனிங் பகுதியைச் சேர்ந்த அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை பெய்த அடை மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.