ECONOMY

பத்துலைத் தைப்பூசம்- கண்காணிப்புப் பணியில் 1,300 போலீசார்

15 ஜனவரி 2022, 1:20 PM
பத்துலைத் தைப்பூசம்- கண்காணிப்புப் பணியில் 1,300 போலீசார்

கோம்பாக், ஜன 15- நாளை தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலைத் திருத்தலத்தில் 1,300 போலீஸ்காரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

நிலையான செயலாக்க நெறிமுறைகள் (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்கப்படுவதையும் தைப்பூச விழா எந்த இடையூறுமின்றி சீராக நடைபெறுவதையும் உறுதி செய்யும் பணியை அவர்கள் மேற்கொள்வர் என்று கோம்பாக்  மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது கூறினார்.

பத்து உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 308 கீழ் நிலை அதிகாரிகளை உட்படுத்திய இக்குழுவினர் நாளை மாலை 7.00 மணி முதல் வரும் 21 ஆம் தேதி நள்ளிரவு 12.00 வரை பணியில் ஈடுபடுவர் என அவர் தெரிவித்தார்.

இது தவிர, சுகாதார அமைச்சு, செலாயாங் நகராண்மைக் கழகம், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஏபிஎம் எனப்படும் பொது தற்காப்பு பிரிவு ஆகிய அரசு நிறுவனங்களின் உறுப்பினர்களும் இந்த கண்காணிப்பு பணியில் பங்கேற்பர் என்று இன்னு கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

ஆலயம் வருவோருக்கு மூன்று விதமான அடையாள அட்டைகளை ஆலய நிர்வாகம் வழங்கும். பால் குடம் எடுப்போர், வழிபாட்டிற்கு வருவோர் மற்றும் ஆலய வளாகத்தில் இருப்போர் என மூன்று பிரிவினருக்கு அந்த அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் அவர்.

இவ்வாண்டு தைப்பூசத்தில் காவடி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அவர், இந்த தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதோடு எஸ்.ஒ.பி. விதிகளை மீறுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தைப்பூச விழாவையொட்டி பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள பல சாலைகள்  போக்குவரத்துக்கு மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.