சுபாங் ஜெயா, டிச 15- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்ட மாநில அரசின் பொருளாதார திட்டங்கள் இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பயனளித்துள்ளது.
நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்கள் நலனைக் காப்பதற்கான திட்டங்களை மேற்கொண்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான நிர்வாகத்தை தாம் பெரிதும் பாராட்டுவதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சிலாங்கூர் அரசின் உதவித் திட்டங்கள் மக்களுக்கு கூடுதல் அனுகூலத்தை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஃபுல் கோஸ்பெல் தெபனக்கல் தேவாலயத்தில் மாநில நிலையிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களுக்கு உதவுவதற்காக 110 கோடி வெள்ளி மதிப்பிலான ஐந்து பொருளாதார உதவித் தொகுப்புகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்பு கூறியிருந்தார்.








