ஷா ஆலம், டிச 2- கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களை இளம் வயதிலேயே அடையாளம் காண்பதற்காக பத்து பள்ளிகள் தளமாக கொள்ளப்படவுள்ளன.
அகாடமி துனாஸ் எனப்படும் இளம் வயதினருக்கான பயிற்சி மையமாக ஜொஹான் செத்திய ஆரம்பப் பள்ளி, புத்ரா ஹைட்ஸ் 2 தொடக்கப் பள்ளி, காஜாங் தொடக்கப் பள்ளி, பத்து 9 தொடக்கப் பள்ளி, தாமான் பூங்கா ராயா 2 தொடக்கப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று இளம் தலைமுறையினர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
அதே சமயம் மாவட்ட பயிற்சி மையங்களாக டத்தோ ஹருண் இடைநிலைப்பள்ளி, மேரு இடைநிலைப்பள்ளி, ஷா ஆலம் இடைநிலைப்பள்ளி, காஜாங் இடைநிலைப் பள்ளி, கோல குபு பாரு இடைநிலைப்பள்ளி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
திறன்மிக்க ஆட்டக்கார்களை அடிமட்ட நிலையிலேயே அடையாளம் காண்பதில் சிலாங்கூர் கால்பந்து சங்கம் மற்றும் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்துடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் கால்பந்து கிளினிக் திறப்பது தொடர்பான பரிந்துரை குறித்து சபாக் தொகுதி உறுப்பினர் அகமது முஸ்தாயின் ஓத்மான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.








