ஷா ஆலம், நவ 30- கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயாவிலுள்ள தஞ்சோங் பாசீர் தென்னமரத் தோட்டப் பகுதியில் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 96.4 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளது.
சரிகாட் பாரிசான் சூரியா சென்.பெர்ஹாட் மற்றும் டிரிலியன் புரோஜெக்ட் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களுக்கு வேறு இடத்தில் விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்புக்காக மாற்று நிலம் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சம்பந்தப்பட்ட நிலத்தை சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பி.கே.பி.எஸ்.) 21 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் என்றும் இந்நிலத்திற்கு விண்ணப்பம் செய்துள்ள சுமார் 400 பேரை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையில் அது ஈடுபட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதே இடத்தில் உள்ள பி.கே.பி.எஸ்.சுக்கு சொந்தமான 795.76 ஏக்கர் நிலம் சட்டவிரோதமான முறையில் மேம்படுத்தப்பட்ட விவகாரத்திற்கும் இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, தென்னமரம் தோட்டத்திலுள்ள 892.16 ஏக்கர் நிலம் தொடர்பில் குடியேற்றக்காரர்களுடன் நிலவி வந்த சர்ச்சைக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அவர்.








