மலாக்கா, நவ 15- மலாக்கா மாநிலத் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவை பெறுவதில் ஆக்கத் திறன் கொண்ட அணுகுறையை பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் வாக்காளர்களை நேரில் சந்திப்பதற்கு கிடைத்துள்ள கூடுதல் அனுகூலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மலாக்காவில் மட்டுமின்றி பிற இடங்களிலும் உள்ள சகாக்களுடன் தொடர்பு கொள்வதற்கு வேட்பாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த முறை 22 மாதங்கள் ஆட்சி புரிந்த பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் காட்டும் ஆதரவு வாக்குகளாக மாற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும். மலாக்காவுக்கு வெளியே உள்ளவர்கள் குறித்து நாம் கவலைப்படுகிறோம். இன்னும் சில தினங்களில் நிலைமையை சீர் செய்ய வேட்பாளர்கள் ஏதேனும் செய்தாக வேண்டும் என்றார் அவர்.
மலாக்கா மாநில தேர்தலில் போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் 12 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.







