ஷா ஆலம், நவ 14- கோலக் கிள்ளான் மேற்கு துறைமுகத்தின் தீர்வைற்ற வர்த்தகப் பகுதியில் வரி உள்பட இரண்டு கோடி வெள்ளி மதிப்பைக் கொண்ட மதுபானங்களைக் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்தது.
கடந்த செப்டம்பர் 21 மற்றும் 27, நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் 627,510 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் அமலாக்கம் மற்றும் கண்காணிப்புத் துறை துணைத் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் வஹாபி அப்துல்லா கூறினார்.
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1 கோடியே 85 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 21 லட்சத்து 11 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மதுபானங்களும் ஆகக் கடைசியாக கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 16 லட்சம் வெள்ளி மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
இந்த மதுபானக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 40 வயதுடைய உள்நாட்டு ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







