ஷா ஆலம், நவ 13- எதிர்க்கட்சி வேட்பாளருடன் விவாதம் புரிவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை தேசிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமது அலி நிராகரித்தது குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மலாக்கா தேர்தலில் எதிர்க்கட்சி முதலமைச்சர் வேட்பாளருடன் விவாதம் நடத்துவதற்கு சுலைமான் இன்னும் தயாராகவில்லை என்பதை இது காட்டுகிறது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான அவர் சொன்னார்.
பொது மக்கள் எழுப்பும் எத்தகைய கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கு தலைவர் என்ற முறையில் நாங்கள் எப்போதும் தயாராக உள்ளதை பறைசாற்ற விரும்புகிறோம் என்றார் அவர்.
ஊழில் ஒழிப்பு விவகாரத்தை தொட்டுப் பேசிய அவர், சொத்துக்களை அறிவிப்பது மட்டுமே போதாது. மாறாக, கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை எதிர் கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற 18 வயதினருக்கு வாக்குரிமை தொடர்பான டவுன்ஹால் கூட்டத்தில் உரையாற்றிய போது அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
மலாக்கா தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி, பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகளின் முதலைமைச்சர் வேட்பாளர்கள் பொது விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று அன்வார் நேற்று முன்தினம் பரிந்துரைத்திருந்தார்.
எனினும், தாம் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தப் போவதாக கூறி சுலைமான் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.







