MEDIA STATEMENT

அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பிட்ட தினத்தில் மறுசுழற்சி பொருள்களை அகற்றும் திட்டம்

27 அக்டோபர் 2021, 5:07 AM
அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பிட்ட தினத்தில் மறுசுழற்சி பொருள்களை அகற்றும் திட்டம்

ஷா ஆலம், அக் 27- அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை அகற்றுவதற்கு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை பிரித்து வைக்கக்கூடிய பொறுப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்  கூறினார்.

மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை அகற்றும் பணி தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அல்லது தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பொருள்களை அகற்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது நமது பரிந்துரையாகும் என்றார் அவர்.

இதன் மூலம் பொது மக்கள் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி பொருள்களை பிரித்து வைப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுசுழற்சி திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்றம், நெஸ்லே புரெடாக்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் மற்றும் கே.பி.டி. ரிசைக்கிள் நிறுவனம் ஆகிய தரப்புக்குக்கிடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வீடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை இல்லத்தரசிகளே மேற்கொள்வதால் அவர்கள் மத்தியில் குப்பைகளைத் தரம் பிரிப்பதன்  முக்கியத்துவத்தை உணர்த்துவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.