ECONOMY

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக தொகையை செலவிட்ட மாநிலம் சிலாங்கூர்

26 அக்டோபர் 2021, 4:16 AM
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக தொகையை செலவிட்ட மாநிலம் சிலாங்கூர்

கிள்ளான், அக் 26- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அதிக தொகையை செலவிட்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.

கோவிட்-19  பெருந்தொற்று காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் அரசு பல்வேறு பொருளாதார மீட்சித் திட்டங்கள் வாயிலாக 110 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 பரிசோதனை போன்ற மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை மாநில அரசு செய்தது. அது 127,000 கோவிட்-19 நோய்த் தொற்று பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டுள்ளது. வேறு எந்த மாநிலமும் இவ்வாறு செய்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பதின்ம வயதினருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். சிலாங்கூர் மாநில அரசு சொந்தமாக வாங்கிய தடுப்பூசிகள் மூலம் மாநிலத்தில் 200,000 முதல் 300,000 பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றார் அவர்.

இங்குள்ள செந்தோசா சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் தீபாவளி பயண நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான் அமல்படுத்திய செயல்முறையை புத்ரா ஜெயாவிலும் அமல்படுத்த முயற்சித்த நிலையில் துரோகத்தால் அந்த பணியை முழுமையாக ஆற்ற முடியாத நிலை உண்டானது என்று மாநில கெஅடிலான் தலைவருமான அவர் சொன்னார்.

முதல் இரண்டு ஆண்டுகளில் சிலாங்கூரில் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றியது, எடுக்கப்பட்ட முயற்சிகளை அனைவரும் கேலி செய்தனர். எனினும் இப்போது அனைவரும் அறிவர் சிலாங்கூரின்   முயற்சி  எவ்வளவு உன்னதமானது,  உயர்வானது  பயனாது என்று,   மாநிலம் தொடர்ந்து பக்கத்தான் மற்றும் கெஅடிலான் வசம் இருந்து வருகிறது, மக்கள் அறிவார்கள் எவர்  அரசியலை  முதன்மைப் படுத்துகிறார்கள் யார் மக்களை முதன்மை படுத்துகிறார்கள்  என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.