ஷா ஆலம், அக் 8- சிலாங்கூர் மாநிலத்தில் சீரான நீர் விநியோகத்தை சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்ட சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் உறுதி செய்யும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அடுத்த வாரம் அந்த மையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பழுதுபார்ப்பு பணிகள் மூலம் கடுமையான பாதிப்புகளை அம்மையம் எதிர்காலத்தில் எதிகொள்வதை தவிர்க்க இயலும் என்று அவர் சொன்னார்.
சுத்திகரிக்கப்படாத நீருக்கான பற்றாக்குறை, சுத்திகரிப்பு மையங்களில் ஏற்படும் பழுது, மாசுபாடு உள்ளிட்ட கட்டுபாட்டை மீறியச் சம்பவங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தவறு காரணமாக குழாய் உடைதல் ஆகியவை நீர் விநியோகத் தடை ஏற்படுவதற்கான காரணங்களாக திகழ்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு காரணத்தை அதாவது சுத்திகரிப்பு மையத்தில் பழுது ஏற்படுவதை தவிர்க்க இயலும். இதன் வழி சுத்திகரிக்கப்படாத நீர் கிடைக்கும் வரை எந்த பிரச்சனையுமின்றி நீர் விநியோகத்தை நாம் சீராக மேற்கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.
நீரின் கொள்ளலவு அதிகரித்த காரணத்தால் வங்சா மாஜூ சுத்திகரிப்பு மையம் செயல்பட முடியாமல் போன சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிக சுமை காரணமாக அந்த மையத்தின் நீர் விநியோகப் பணிகள் தடைபட்டன என்றார் அவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிகப்படியான அழுத்தத்தை தாங்க முடியாத காரணத்தால் நீர் சுத்திகரிப்பு மையத்தின் பம்ப் கருவி வெடித்து ஒரு வார காலத்திற்கு நீர் விநியோகம் தடைபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்வதையும் நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளில் அடிக்கடி இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.








