பந்திங், அக் 8- இன்று தொடங்கி 10 ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கு அபாயத்தை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கடலோரப் பகுதிகளில் வசிப்போர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கெலானாங் கடற்கரை, மோரிப் கடற்கரை, மோரிப் பாரு கடற்கரை, மோரிப், தாமான் ஹர்மோனி, இஸ்தானா பஹாகியா மோரிப், பத்து லாவுட், பந்தாய் சுனாங் மற்றும் தஞ்சோங் சிப்பாட் படகுத் துறை ஆகியவையே கடல் பெருக்கினால் பாதிக்கப்படும் பகுதிகளாகும்.
கடல் பெருக்கு ஏற்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்படி அமலாக்கப் பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கோல லங்காட் நகராண்மைக் கழக தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.
இம்மாவட்டத்தின் கடல் பெருக்கு அட்டவணைப் படி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் அதிகாலை 6.30 மணி முதல் கா 7.13 மணி வரை 5.6 மீட்டர் வரை அலைகள் எழும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்நிலை சீரடைந்து காலை 8.13 மணியளவில் அலையின் உயரம் 5.4 மீட்டராக பதிவாகும் என அவர் சொன்னார்.
இந்த கடல் பெருக்கு அபாயம் காரணமாக கிளானாங் கடற்கரை, மோரிப் கடற்கரை, தாமான் ஹர்மோனி மோரிப், இஸ்தானா பஹாகியா, பத்தாய் பத்து லாவுட் பந்தாய் சுனாங் மற்றும் தஞ்சோங் சிப்பாட் படகுத் துறை ஆகிய பகுதிகளில் உள்ள பொது வசதிகள் மற்றும் உணவுக் கடைகள் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இக்காலக்கட்டத்தில் கடற்கரைகளில் பொழுது போக்கு மற்றும் நீர் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்று மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.







